Wednesday, June 30, 2010

நாசிக் - 13 ஜூன் 2010 - பாகம் 2


தபோவனதிலிருந்து கிளம்பிமுக்தி தாம்என்ற இடத்திற்கு அடுத்த படியாக வந்தோம்.

முக்தி தாம் (Mukthi Dhaam):
முக்தி தாம் என்ற இந்த கோவில்நாசிக் ரோடில்அமைந்துள்ளது. (நாசிக்கின் ரயில் நிலையம், நாசிக் ரோடில் தான் உள்ளது.). ராஜஸ்தானிலிருந்து வரவழைக்கப்பட்ட பளிங்கு கற்களால், ராஜஸ்தானிய சிற்பிகளால் கட்டப்பட்ட மிக அழகான கோயில். இந்த கோயில் 1988ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் சிறப்பம்சம், எல்லா சுவர்களிலும் பகவத் கீதையின் 18 அத்தியாயங்களும் எழுதப்பட்டுள்ளது. சிவன், ராமர், சீதை, லஷ்மணர், திருப்பதி வெங்கடேச பெருமாள், லஷ்மி, என பல திரு உருவங்களை வடித்திருக்கிறார்கள். மிக அற்புதமான வேலைப்பாடு. 12 ஜோதிர் லிங்கங்களையும் இங்கு காணலாம். வரைபடம் போல எல்லா லிங்கங்களையும் அந்தந்த இடத்திற்கு ஏற்ப அமைத்திருப்பது சிறப்பான விஷயம். சுமார் 45 நிமிடம் அந்த கோயிலில் இருந்தோம். மத்தியானம் 1 மணி ஆகி விட்ட்தால் எல்லோருக்கும் நல்ல பசி. நல்ல உணவகம் தேடி கிடைக்காததால் (தெரியாததால்) பாண்டவ் லேணி செல்லும் வழியில் பார்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து அங்கிருந்து கிளம்பினோம்.

செல்லும் வழியில் ஒரு நல்ல ஹோட்டல் தென்பட்டதால் அங்கு சாப்பிட இறங்கினோம். “நல்லதென்னிந்திய சாப்பாடு கிடைக்கும் என பரிமாறுபவன் சொல்ல நாங்களும் உற்சாகம் ஆனோம். சொன்ன மாதிரியே சாப்பாடு நன்றாகவே இருந்த்து. என்ன தென்னிந்திய சாப்பாடு என்ற பெயர் சூட்டிமஹாராஷ்ட்ராதாலி (தட்டு) உபசரித்தான். பின்னர், பாண்டவ் லேணி சென்றோம்.

பாண்டவ் லேணி: மராத்தியில் லேணிஎன்றால்குகைஎன்று அர்த்தம். 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஜைன அரசர்களால் கட்டப்பட்டது. குகைகளில் உள்ளே எழுதப்பட்டிருக்கும் குறிப்புகள், 17ம் நூற்றாண்டில், பாண்டவர்களால் எழுதப்பட்டதாம். அதனால் பெயரும் பாண்டவ் லேணி என அமைந்த்து. கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் இந்த குகைகள் உள்ளன. இந்த குகைகள், புத்தர் காலத்தை சேர்ந்த்து. மேலும், இது முந்தைய காலத்தில் தியானம் செய்வதற்கு புத்த மதத்தை சேர்ந்தவர்களால் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.



கீழே, ஒரு பெரிய புத்தர் கோயில் உள்ளது. 3, 4 ஆள் உயரம் கொண்ட ஒரு புத்தர் சிலை உள்ளது. அரை கோள வடிவத்தில் கோயில் உள்ளது. அமைதியாக கோயிலில் 10 நிமிடங்கள் இருந்தோம். பின்னர் 3000 அடி மேலே உள்ள குகைக்கு செல்ல நினைத்தபோது, அப்பா, தான் கீழேயே இருப்பதாக சொல்லிவிட்டார். நாங்கள் அனைவரும் மேலே செல்ல ஆரம்பித்த போது, முதல் 2 நிமிடங்களிலேயே, அம்மாவும் ஏற முடியவில்லை என திரும்பிவிட்டார். பின்னர், வைஷாலி, சுதாகர், ரேவதி என ஒவ்வொருவராக திரும்பி கீழே சென்று விட்டனர். உண்ட மயக்கம், கைகுழந்தை, மிகவும் செங்குத்தான பாதை, படிகள் என ஒவ்வொருவருக்கும் பல பிரச்சனைகள்.!!

விஷ்ணுவும், ஜெயகிருஷ்ணாவுக்கும் மேலே சென்று விட வேண்டும் என ஒரே வேட்கை. இருவரும் வேகமாக ஏறிக் கொண்டிருக்க நானும் கூடவே அவர்கள் உற்சாகத்தை குறைக்காத விதத்தில் அவர்களுக்கு ஈடுகொடுத்தேன். ஆனாலும் 90% ஏறிய பிறகு களைப்பாகத்தான் இருந்தது. இப்படி ஏற வேண்டும் என தெரிந்திருந்தால் சாப்பிடுவதற்கு முன்னாலேயே
வந்திருக்கலாம் என்ற எண்ணமும் எழுந்தது. இருவரும் கொடுத்த உற்சாகத்தில், மீதமும் ஏறி உச்சிக்கு சென்று விட்டோம்.

ஆஹா, என்ன அருமை!!! நாசிக் முழு நகரம் எங்கள் மூவரின் கண்களில் தென்பட்ட காட்சி வார்த்தைகளால் விவரிக்க இயலாது. கஷ்டப்பட்டு ஏறியதற்கு கை மேல் பலன்!!. காமெரா கண்களின் மூலம் விஷ்ணுவும், ஜெயகிருஷ்ணாவும் படம் பிடித்து தள்ளினார்கள். மேலே வந்ததும் எனக்கு மட்டும் தான் நுழைவு சீட்டு (5 ரூபாய்). 15 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு அனுமதி இலவசம்.
புத்தர், போதிசத்வர், ஜைன தீர்த்தங்கரர் போன்ற பல மகான்களின் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளது. இந்த குகைகள் அவர்களின் வாச ஸ்தலமாகவும், போதனை இடமாகவும் அமைந்திருந்தது. ஏறியதை விட இறங்கும் போது இன்னமும் ஜாக்கிரதையாக இருந்தோம். இருவருக்கும் மகா திருப்தி….. அங்கிருந்து புகழ் பெற்ற த்ரியம்பகேஷ்வருக்கு பயணமானோம். மாலை 4.30க்கு கோயில் போய் சேர்ந்தோம்.

த்ரியம்பகேஷ்வர்: இந்த கோயில் நாசிக்கிலிருந்து 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற 12 ஜோதிர் லிங்கங்களில் இதுவும் ஒன்று. பிரம்மகிரி மலை அடிவாரத்தில், மலையின் பின்னணியில் கோயில் அமைந்துள்ளது. பிரம்மகிரி மலையில் தான் கோதாவரியின் ஜன்ம ஸ்தானம். எப்படி கங்கைக்குபாகீரதிஎன்று பெயர் உள்ளதோ, அதேபோல், கோதாவரிக்கும், ”கெளதமி கங்காஎன்று பெயர் உள்ளது.

கெளதம முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்கி, இங்கு சிவபெருமான் வந்ததால், இந்த கோயில் அமைந்தது என சிவபுராணம் கூறுகிறது. மேலும் கெளதம முனிவரின் ப்ரார்த்தனைக்கு இணங்கி, சிவபெருமான் தன் சிரசிலிருந்து கங்கையை அனுப்பி வைத்தாராம். அதனால் தான், கோதாவரிக்குகெளதமி கங்காஎன்று பெயர் அமைந்தது.
பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று தெய்வங்களும் மூன்று கண்களாக, மூன்று சிவ லிங்கங்களாக இருப்பதால், த்ரியம்பகேஷ்வர் என அழைக்கப்படுகிறார். எல்லா சிவ ஸ்தலங்களிலும் சிவ லிங்கம் வெளியில் கண்களுக்கு தெரியும். இங்கு மட்டும் பூமிக்கு அடியில் உள்ளது. மேலே வெள்ளி கவசம் அணிவித்து இருந்தார்கள். மூன்று சிவ லிங்கங்களில், (பிரம்மா, விஷ்ணு, மகேஷா) கோதாவரி மகேஷா சிவ லிங்கத்திற்கு மட்டும் பூமிக்கு அடியிலிருந்து நீருற்று பிரவாகம் எடுக்கிறது!! அதனால் இங்கு சிவ பெருமானுக்கு தண்ணீர் அபிஷேகம் கிடையாது!!

ஒன்றரை மணி நேரம் வரிசையில் காத்திருந்த பிறகு அருமையான தரிசனம் கிடைத்தது. இந்த கோயிலில் நுழைவதற்கு முன்னர், வாசலில் உள்ள காளை மற்றும் பசு மாட்டிற்கு எல்லோரும் புல் கொடுப்பது வழக்கம். நாங்களும் கொடுத்தோம்மாலை 6.45 மணிக்கு கிளம்பி இரவு 11 மணிக்கு தாணே வந்து சேர்ந்தோம்.

இப்படியாக, எங்களின் ஷிர்டி, நாசிக் பயணம் இனிதே நிறைவுற்றது. சாய் பாபா, ராமாயணம் மற்றும் மஹாபாரத இடங்கள், ஜோதிர் லிங்கம்,ஒரு நதியின் கதை, புத்த ஜைன இடங்கள் என பார்த்ததில் மன நிறைவு பெற்றோம்.

நாசிக்கிற்கு, 1997ல், விமான மராமத்து பயிற்சிக்காக சென்றிருந்தேன். ஆனால் அப்போது ஒன்றும் பார்க்க இயலாத சூழ்நிலை. இரண்டு வாரக் கடைசியில் பூனா வந்து விட்டேன். பிள்ளையார் சதுர்த்தி நேரம். மீதமிருந்த இரு வாரங்களில் பயிற்சி பணியிலேயே மூழ்கி விட்டேன் (ஞாயிறு கிழமைகளும் உள்பட). 13 வருட விட்ட குறை, தொட்ட குறை 2010 ஜூனில் தீர்ந்தது.

மேலும் பல இடங்கள் நாசிக்கில் உள்ளது. குறைந்த பட்சம் 3 நாட்கள் தேவை. நாணய பொருட்காட்சி சாலை குறிப்பிடதக்கது. நாங்கள் நேரப் பற்றாக்குறையால் பார்க்க இயலவில்லை.

பி.கு: ரூபாய் அச்சடிக்கும் இடம் இங்கு உள்ளது!!! ஆனால் என்ன, அப்பா சொன்ன மாதிரி, ”கட்டு கட்டாக” கொண்டு வர இயலவில்லை. போனால் போகிறது ரூபாய் கிடைக்காவிட்டால் என்ன, என 12 கிலோ பெரிய வெங்காயம் திரும்பி வரும் வழியில் ரூ. 40க்கு வாங்கினோம்.



3 comments:

Rajappa said...

Good, descriptive narration. Nashik seems to be a better spot than Shirdi. Ashok and his cousin Krishnaraj climbed those 3000 feet - Ashok with a little difficulty but his cousin (elder to Ashok) with ease!

Anonymous said...

மிகவும் அருமையான விளக்கம். இன்டர்நெட்டில் இதுபோல படங்களுடன் அழகாக விவரமாய் ஒன்றும் நான் பார்க்கவில்லை, இதுவரை. நாசிக் போய்வரவேண்டும் என்று ரொம்ப நாட்களாய் ஆசை. இப்பொழுது உங்கள் விவரங்களால் ஒரு திட்டம் கிடைத்துவிட்டது. மிக்க நன்றி

சொல்மண்டி இரா

Anonymous said...

நாசிக், ஷ்ரீடி, முக்தி தாம் மற்றும் எல்லா ஸ்தலங்களைப் பற்றியும் முடிந்த அளவிற்கு அழகாக விவரித்துள்ளாய்.

நல்ல பயணக்கட்டுரை with useful informations and wonderful photoes (especially a person sitting on the platform(!) with a water bottle)

புண்யஸ்தலங்களை எழுதி மேலும் புண்யம் சேர்த்துக் கொண்டுள்ளாய். Thanks

Yours affectionately,
Thambikumar