மாதுங்கா பற்றி பல முறை கேள்வி பட்டதுண்டு. சின்ன வயதில் இந்த பெயரை கேள்வி பட்ட போது, "அம்மங்கா" , "அத்தங்கா" கேள்வி பட்டிருக்கிறோம், ஆனால், "அதென்ன மாதுங்கா?", என பல முறை யோசித்திருக்கிறேன்..
சுகவன சித்தப்பா மும்பை வந்த போது, ஒரு நாள் மாலை சந்தரின் மாமாவை மாதுங்காவில் சந்திக்க சென்றிருந்தார். அவரை அழைத்து வர வாஷியிலிருந்து முதல் முறையாக மாதுங்கா சென்றேன் (மும்பை வந்த பிறகு பல முறை கடந்து சென்றிருக்கிறேன் என்பது வேறு விஷயம்). அன்று மாலை, மாதுங்கா ஸ்டேஷன் வரை சந்தரின் மாமா எங்களை கொண்டு விட வந்தார். வரும் வழியில், மாதுங்கா பற்றி நிறைய சொல்லிக்கொண்டே வந்தார்.
மற்றொரு நாள் மத்தியானம், என் ஆபீஸ் மீட்டிங் முடித்து திரும்பி வருகிற போது கிங் சர்க்கிள் (மாதுங்கா) வழியாக வரும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடன், என் டைரக்டர்கள் ஹரிஹரன் மற்றும் வெங்கடேஷ் இருந்தனர். மாதுங்காவில் உள்ள ஆரிய பவனில் சாப்பிடலாம் என்று முடிவு எடுத்தார்கள். "அட, நம்ம சாப்பாடா" என ஆச்சர்யம் அடைந்தேன்.
இந்த அனுபவங்களை, வைஷாலி மற்றும் விஷ்ணுவிடம் சொன்ன போது அவர்கள் அடைந்த ஆச்சர்யத்துக்கு அளவே இல்லை. எப்போது போகலாம் என திட்டம் போட ஆரம்பித்து விட்டோம்.
ஒரு நாள் மாலை கிளம்பி மாதுங்காவுக்கு லோக்கலில் சென்றோம். காஞ்ஜுர்மார்க் (எங்கள் ஆரம்ப ஸ்டேஷன்). விக்ரோலி, வித்யாவிஹார், காட்கோபர், குர்லா, சையான் என்று 5 ஸ்டேஷன் கடந்த பின்னர் மாதுங்கா வரும். ஸ்டேஷன் விட்டு வெளியில் வந்து வலது பக்கம் திரும்பி மாதுங்கா ஜிம்கானா, வில்லின்கேர் காலேஜ், போட்டர் (Poddar) காலேஜ் மற்றும் ருயா காலேஜ் என பார்த்து கொண்டே மெயின் ரோடு பிடித்தோம். இன்னும் கொஞ்ச நடைக்கு பிறகு கிங் சர்க்கிள் வந்தடைந்தோம்.
கிங் சர்க்கிள் என்பது மிக பெரிய round about. அதற்கு உள்ளேயே மிக பெரிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 30 நிமிடங்கள் பூங்காவில் பொழுதை போக்கி விட்டு பிறகு வெளியில் வந்தோம்.
கிங் சர்க்கிளில் கிட்டதட்ட 7, 8 பாதைகள் பிரிந்து செல்கிறது. எந்த பாதையில் செல்வது என குழப்பம்.... ஒரு வழியாக அதிக கூட்டம், கடைகள் உள்ள ரோட்டில் செல்லலாம் என முடிவேடுத்து நடந்து சென்றோம்.
அந்த வழியில், பல பூக்கடைகள் தென்பட்டன. இவ்வளவு பூக்கடைகளா என்று வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்த வேளையில்,அருள்மிகு ஸ்ரீராமஸ்வாமி கோயில் பார்த்து ஆச்சர்யப்பட்டோம். உள்ளே சென்றால், மூல சன்னதி ராமர், சீதை. பிள்ளையார், விஷ்ணு, ஐயப்பன் மற்றும் நவக்கிரஹம் என பல சன்னதிகள்!!! முழுக்க முழுக்க தமிழ் கோயில்.... கோயில் விட்டு வெளியே வந்து 2 நிமிட நடையில் “கிரி ட்ரேடர்ஸ்” கடையைப் பார்த்தோம். அருகிலேயே கோ-ஆப்டெக்ஸ் கண்ணில் பட்டது. நாம் காண்பது கனவா, நனவா என்று உறுதிப்படித்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டோம்.
கிட்டதட்ட 2 மணி நேரம் சுற்றிய பிறகு, ஆரியபவனில் சாப்பிடுவதற்கு சென்றோம். கீரை வடை, மைசூர் மசாலா தோசை, தயிர் வடை, சாதா ரோஸ்ட், தயிர் சாதம், என தென்னிந்திய வகைகளாகவே சாப்பிட்டோம். இந்த ஹோட்டலில், தயிர் சாதத்துக்கு தொட்டுக்க மோர் மிளகாய் கிடைக்கும்!!
ஹோட்டலை விட்டு வெளியே வந்து, அதே ரோட்டிலேயே நடந்து சென்றால், மீண்டும் மாதுங்கா ஸ்டேஷன் வந்தடைந்து விட்டோம்!! ஒரு பெரிய சுற்று (கிட்டதட்ட 3 கிமீ) வந்து விட்டோம் என்று புரிந்தது. அதே வழியில், ஒரு மினி ”கொத்தவால் சாவடி” பார்த்தோம். குறிப்பாக தமிழ் காய்கறிகளும் கிடைக்கிறது. இது ஸ்டேஷனுக்கு மிக அருகாமையில் உள்ளது.
”ஆலில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை” என்ற பழமொழிக்கேற்ப மாதுங்கா எங்களுக்கு மைலாப்பூர்…. என்ன தெப்பகுளம் இல்லை என்ற ஒரு குறையை தவிர்த்து விட்டால் மாதுங்கா மைலாப்பூருக்கு சமமாகி விடும்.
இப்படியாக ஒரு மாலை பொழுது மிக இனிமையாக கழிந்தது.